20 July 2011

யாழ் நகர வீதியில்......

யாழ் நகர வீதியில்

யாழ் நகர வீதியில் நாம் சுற்றித்திரிந்த காலங்கள்
வல்லை வெளி நாம் சென்று காற்று வாங்கிய நேரங்கள்
நல்லூர் கந்தன் வீதியில் நாம் கம்பன் கழகம் பார்த்ததும்
ராஜா தியேட்டர் அரங்கிலே களவாய் சினிமா பார்த்ததும்
லேடிஸ் கொலிஜ் சுண்டுக்குழி வேம்படி வீதியெல்லாம்
சைக்கிளிலே சுற்றியது என் நெஞ்சில் சுற்றுதடா

சட்டநாதர் கோவிலில் அருணா கோஸ்டி பார்ப்பதும்
இளங்கலைஞர் மன்றத்தில் அரங்கேற்றம் பார்த்ததும்
சின்னமணி வில்லிசை சின்ன வயதில் பார்த்ததும்
மாவிட்டபுரம் கோவிலில் மாவிளக்குப்போட்டதும்

கீரிமலைக்கடலிலே நீச்சல் பழகப் போனதும்
கச்சான் கடை ஆச்சியோடு சண்டை பிடித்து ஓடியதும்
தட்டிவானில் ஏறி சன்னதிகோவில் போனதும்
அன்னதான மண்டபத்தில் வரிசையாக நின்றதும்
பண்டித்தளச்சி அம்மன் கோவில் பங்குனித்திங்கள் பொங்கலும்
வல்லிபுரக்கோவிலின் நாமம் அள்ளிப் பூசியதும்
நாகர் கோவில் மணல்காடு சவுக்கங்காட்டு தோப்பெல்லாம்
கப்பல் திருவிழா பார்த்தது என்நெஞ்சில் நிக்குதடா

துர்க்கை அம்மன் கோவிலில் பிரதட்டை அடித்ததும்
மாரியம்மன் கோவிலில் தீவட்டி பிடித்ததும்
சுட்டிபுரம் அம்மன் கோவில் சீர்காழி கச்சேரியும்
நயினை அம்மன் கோவிலுக்கு வள்ளத்திலே போனதும்

விக்னா ரியூசன் போனதும் சயன்ஸ் ஹோலில் படித்ததும்
நேற்றுப்போல தெரியுது இது வாழ்வில் மறக்குமா
பள்ளிக்கூடம் போகாமல் பிக்மச் பார்க்கப்போனதும்
வாத்தியாரைக் கண்டதும் கூட்டத்திலே மறைந்ததும்

யாழ் நகர வீதியில் நாம் சுற்றித்திரிந்த காலங்கள்
வல்லை வெளி நாம் சென்று காற்று வாங்கிய நேரங்கள்
நல்லூர் கந்தன் வீதியில் நாம் கம்பன் கழகம் பார்த்ததும்
கைலாசபதி கலையரங்கில் கலர்ஸ் நைட்பார்ததும்
லேடிஸ் கொலிஜ் சுண்டுக்குழி வேம்படி வீதியெல்லாம்
சைக்கிளிலே சுற்றியது என் நெஞ்சில் சுற்றுதடா

யாழ் நகர வீதியில் நாம் சுற்றித்திரிந்த காலங்கள்
வல்லை வெளி நாம் சென்று காற்று வாங்கிய நேரங்கள்

No comments: